(1)
செய்ய வேண்டும் என்கிற நினைப்பே அலுப்பைத் தந்தது.
முதலில், கனமான கம்பளி சாக்ஸ். அடுத்து, உடம்பின் சூட்டைக் கட்டிக் காப்பாற்ற, இடுப்பிலிருந்து கணுக்கால் வரை தெர்மல் அண்டர்வேர். அதற்கு மேல், தடிமனாய் ஜீன்ஸ். மேல்பகுதி உடம்புக்கு பனியன், ஸ்வெட்டர், கடைசியாக ஓவர்கோட். இவை தவிர கையுறை, காதுகளுக்கு மஃப்ளர், காலில் ஷூ.
போதுமா அலங்காரம்! இத்தனையும் செய்துகொண்டால்தான், படி இறங்கிச் சென்று, நடைபாதையில் கிடக்கும் ‘ஸ்னோ’வை வாறிக் கொட்டி, இடத்தை சுத்தப்படுத்துவது சாத்தியமாகும்.
இவ்வளவு பாதுகாப்பு செய்துகொண்ட பிறகும், எண்ணி இரண்டு நிமிஷங்கள் போவதற்குள், மறைப்பு இல்லாத காரணத்தால் இருக்கின்றனவா, அல்லது காணாமல் போய்விட்டனவா என்கிற சந்தேகம் எழுகிற தினுசில் மூக்கும் உதடுகளும் சுத்தமாய் மரத்துப் போய்விடும்! இன்னும் கொஞ்சம் நேரம் நின்றால், கண்களிலிருந்தும் மூக்கிலிருந்தும் நீர் வடியும், பற்கள் தாளம் போட முற்படும். தொடர்ந்து, ‘எந்தக் கொம்பனாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது தெரியுமா?’ என்கிற ஏளனச் சிரிப்புடன் பனிக்காற்று அத்தனை கம்பளி உடைகளையும் ஊடுருவி எலும்புகளை ஓட்டை போடும்!
மொத்தத்தில் சரியான அவஸ்தை.
சாதாரணமாகவே, மைதிலிக்கு ‘குளிர்கால அமெரிக்காவை’ப் பிடிக்காது தான். டிசம்பரில் துவங்கி மார்ச் முடிய நசநசவென்று என்னேரமும் கொட்டி, தெரு, தோட்டம், சுற்றுப்புறம் என்று அத்தனை இடத்தையும் ஸ்னோ ஆக்ரமிப்பது அவளுக்கு சுத்தமாய்ப் பிடிக்காத சமாசாரம். அவளுக்கு அந்த நாட்டின் வசந்தம் பிடிக்கும், இலையுதிர் காலம் பிடிக்கும், ஏன் கோடை எனப்படும் ஸம்மர்கூடப் பிடிக்கும்தான். ஆனால் இந்த ‘விண்டர்’ வந்தாலே, ‘ஐயோ’ என்று மனசு பதறுவது மட்டும் மாறவேயில்லை.
வண்ணவண்ணப் பூக்களும், பச்சை இலைகளுமாய் ஆளை மயக்கியவை மாயமாய் மறைந்து, வெள்ளை உடுத்தி அத்தனையும் உருவிப் போட்டு நிற்கும் கைம்பெண் மாதிரி, ஊர் முழுவதும் மாறிப்போவது அவளைப் பொறுத்தவரை நியாயமில்லாத மாற்றம்.
அமெரிக்காவுக்கு வந்து கணவரோடு புதுக்குடித்தனத்தைத் துவக்கிய வருஷம், முதல்முதலாய் ஜாதிப்பூக்களாய் ஆகாசத்திலிருந்து உதிர்ந்த பனித் துகள்களைக் கண்டு பரவசப்பட்டாலும், ஒரு மாசம் போவதற்குள் பசுமையை அழித்துவிட்டு வெள்ளைப் போர்வை படர்ந்தபோது, அது அலுத்துப்போயிற்று.
சென்னையில் பிறந்து, அதன் வெப்பத்தில் வளர்ந்தவளுக்கு, அந்தக் குளிரும் பனியும் சத்ருக்களானதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
இவள் எரிச்சல் படும்போதெல்லாம், வெங்கட் சிரிப்பான். ‘விண்டரை ரசிக்கக் கத்துக்கோ, மைதிலி!’ என்பான், கண்களைச் சிமிட்டிக்கொண்டு.
இந்த ஜூலை வந்தால், அமெரிக்காவுக்குக் குடியேறி பதினாறு வருஷங்கள் பூர்த்தியாகப் போகின்றன. ஆனால், இன்னமும் குளிர்காலத்தை ரசிக்க அவள் பழகவில்லை என்பதுதான் நிஜம்.
எங்கேயிருந்து பழகுவது? எமக்குளிர் ஒரு பக்கம் என்றால், அதோடு குஸ்தி போடும் விதமாய் உடைகள் அணியவேண்டிய ஹிம்சை இன்னொரு பக்கம் ஆயிற்றே! காலை வீசிப்போட்டு நடக்க வேண்டுமானால், தெரு முனையில் இருக்கும் ஸூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றுவர வேண்டு மென்றால், ஏன், வீட்டிலிருந்து பத்தடி நடந்து காரில் ஏற வேண்டு மென்றாலும்கூட, அத்தனை கம்பளி உடைகளையும் அணிந்து தஞ்சாவூர் பொம்மை மாதிரி செல்லவேண்டும் என்கிற நிர்பந்தம் எழுகையில், ரசிப்பு எங்கிருந்து வரும்!
காலைத் தடுக்கும் புடவை, பனிக்குள் புதைந்து போகும் ஷூ, துளி கவனக்குறைச்சலாய் இருந்தாலும் வழுக்கிவிடும் உறைந்த ஐஸ்… ச்சே!
மைதிலி மெதுவாக எழுந்தாள். ஜன்னலருகில் சென்று, திரையை விலக்கி, கண்ணாடியைத் துடைத்துவிட்டு வெளியே பார்த்தாள்.
தோட்டம், நடைபாதை, மரங்கள், தூரத்தில் தெரிந்த அண்டை வீடு… சர்வம் ஸ்னோ மயம்!
இரண்டு மாசங்கள் வரையிலும்கூட, மரகதப் பச்சையாய் விரிந்திருந்த புல்வெளி அது என்று, சத்தியம் பண்ணிச் சொன்னால்கூட நம்ப மாட்டார்கள்.
‘வழக்கமாக நியுயார்க் மாநிலத்தில் இத்தனை பனி பெய்யாது. இந்த வருஷம் ரொம்ப அதிகம். வரப்போகும் வாரங்களில் இன்னும் அதிகரிக்கும்’ என்று வானிலை நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்!
“நாங்களும் ‘ஸ்ப்ரிங் டேலி’ல் ஏழு வருஷங்களாய் குடியிருக்கிறோம்… ஆனால், பிப்ரவரி மாசம் இந்த அளவு பனி விழுந்து பார்த்ததில்லை!” என்று இரண்டு நாட்களுக்கு முன் ஸூப்பர் மார்க்கெட்டில் மார்த்தாவைச் சந்தித்தபோது கூறினது நினைவுக்கு வந்தது.
அரை நிமிஷம் அப்படியே நின்று, ஆளரவமற்ற சுற்றுப்புறத்தை வெறித்தாள். ஷெட்டிலிருந்து பிரதான சாலைக்குச் செல்லும் வழியில் இருந்த ஸ்னோவை, காலையில் வேலைக்குச் செல்லுமுன் வெங்கட் அகற்றியிருந்ததில், அந்தப் பாதை மட்டும் பிரதான சாலைக்கு நிகராய் கறுப்பு தார் வித்தியாசமாய் பளிச்சிட்டது.
பிரதான சாலைகளைப் பராமரிப்பது, டவுன்ஷிப் நிர்வாகத்தின் பொறுப்பு. ரோடு பெரியதாக இருந்தால், ஸ்னோ உழவு மிஷினை ஓட்டி வந்து, கொட்டிக் கிடக்கும் பனித்துகள்களை அப்புறப்படுத்தி, மீண்டும் பனி விழுந்து போக்குவரத்து தடைபடாமல் இருக்கவென, கல்உப்பையும், பொடி சரளைக் கற்களையும் சாலை பூராவும் தூவிவிட்டுப் போவார்கள். கொஞ்சம் உள்ளடங்கிய சின்ன வீதிகளில், ஸ்னோ ப்ளோயர் வந்து பனியைத் திரட்டி பக்கவாட்டிலுள்ள புனல் வழியாக ஓரமாய் கொட்டிவிட்டுப் போகும்.
அப்படி ஸ்னோ ப்ளோயர் மிஷினோடு முந்தின நாள் தெருவை சுத்தப்படுத்த வந்த நகராட்சிப் பணியாள், இவள் வீட்டுக்கெதிரில் இருந்த நடைபாதையில் நாலு இஞ்ச் போல பனி அப்படியே கிடந்ததைப் பார்த்து விட்டு, மிஷினை நிறுத்தின கையோடு, படியேறி வந்து மணி அடித்தான். கதவைத் திறந்தவளிடம் “குட் மார்னிங், மேம்…” என்றவன், “உங்கள் வீட்டு நடைபாதையில் பனி அப்படியே இருக்கிறது. யாராவது சறுக்கி விழும் அபாயம் உள்ளது. பனிமழை பெய்த நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் அந்தந்த வீட்டு வாசல்களில் இருப்பவற்றை அந்தந்த சொந்தக்காரர்கள் அகற்ற வேண்டும் என்பது நகராட்சியின் விதிமுறை. செய்யத் தவறினால் அபராதம் உண்டு. நீங்கள் இந்த வட்டாரத்திற்குப் புதுசு என்பதால் ஞாபகப்படுத்துகிறேன்…” என்று நறுக்குத் தெறித்த மாதிரி சொல்லிவிட்டுப் படியிறங்கியவன், தொடர்ந்து கூறினான்…
“அடுத்த தெருவில் இருக்கும் டாக்டர் ஜான்ஸன் பனியை அகற்றத் தாமதித்ததில், அதில் வழுக்கி விழுந்த பெண்மணி நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடுத்திருக்கிறார். தொகை என்ன தெரியுமா? 5,00,000 டாலர்கள்! இதையும் நீங்கள் தெரிந்துகொள்வது நல்லது.”
தொப்பியைத் தொட்டு, “குட் டே, மேம்…” என்றவன், வேகமாய் நடந்து, மிஷினில் ஏறி அமர்ந்து அதைக் கிளப்பிக்கொண்டு போனான்.
நேற்று முதுகுவலி அதிகமாய் இருந்ததால், மைதிலி நடைபாதைப் பனியை வாற முனையவில்லை. இன்றும் அப்புறப்படுத்தாவிட்டால், விஷயம் விபரீதமாகிவிடும்.
ஹவுஸ் கோட்டை அவிழ்த்துவிட்டு, அலமாரியிலிருந்து தேவையான உடைகளை அணிந்துகொண்டாள்.
மூட்டை மாதிரி நகர்ந்து, ஷெட்டிலிருந்து பெரிய இரும்பு அகப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது, ‘என்ன கஷ்டகாலம் இது?’ என்கிற சலிப்பு உள்ளுக்குள் மண்டியது.
நடைபாதையில் கிடந்த ஸ்னோவை நாலுதரம் ஷவலில் எடுத்து ஓரமாய் போடுவதற்குள், மூச்சு இறைத்தது. அடி முதுகில் பளிச்சென்று வலி கோடிழுத்தது.
இரும்பு அகப்பையைத் தரையில் ஊன்றி, ஆஸ்வாசப்படுத்திக்கொள்ள முயன்றாள்.
போன வருஷம் வரைக்கும்கூட, அவள் இந்த அவஸ்தையை அனுபவித்ததில்லை. அமெரிக்காவுக்கு வந்த நாளாய், வெங்கட் முதலில் வாஷிங்டன் யூனிவர்ஸிடியிலும், பின்னர் நியூயார்க், கொலம்பியா சர்வகலா சாலையிலும் வேலைபார்த்ததில், பதினைந்து வருஷங்களுக்கும் மேலாய் ஃபிளாட்களில்தான் வாசம். விண்டர் எத்தனை கடுமையாக இருந்தாலும், அபார்ட்மெண்ட் சொந்தக்காரர்கள் எவரும் விரல் அசைக்க வேண்டியதில்லை. கட்டிட நிர்வாகி சகலத்தையும் பார்த்துக்கொண்டு விடுவார்.
ஆறு மாசங்களுக்கு முன் பேராசிரியர் வேலையை ராஜினாமா செய்து விட்டு, தனியார் கம்பனி ஒன்றுக்கு ஆலோசகராய் வெங்கட் பொறுப்பேற்று, வருஷத்திற்கு அறுபதாயிரம் டாலர்களாக இருந்த வருமானம் கண் மூடித் திறக்கும் நாழிகையில் ஒரு லட்சமாக மாறிய பிறகு, சடசடவென்று அவர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.
ஹட்ஸன் நதிக்கரையை ஒட்டி, ரிவர்ஸைட் ட்ரைவில், கொலம்பியா யுனிவர்ஸிடியை தொட்டுக்கொண்டிருந்த அபார்ட்மெண்டை விட்டுவிட்டு, புறநகரில் வசதியானவர்கள் வாழும் ஸ்ப்ரிங் டேலில் தனி வீட்டுக்கு மாறினார்கள். கடன் வாங்கித்தான் என்றாலும், சொந்த வீடு. மூன்று படுக்கை அறைகள், தனித்தனி சாப்பாடு, வரவேற்புக் கூடங்கள், வசதியான சமையல்கட்டு. இரண்டு வண்டிகளை நிறுத்த கராஜ். டேபிள் டென்னிஸ் மேஜை, வாஷிங் மிஷின் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய விஸ்தாரமான பேஸ்மெண்ட்.
மூச்சிரைப்பு அதிகமாக, மைதிலி கைக்காரியத்தை கொஞ்சம் நிறுத்தினாள்.
மூச்சிரைப்பு அதிகமாக மைதிலி கைக்காரியத்தை கொஞ்சம் நிறுத்தினாள்.
அவளைத் தாண்டிக்கொண்டு போன வண்டியிலிருந்து, மூன்றாவது வீட்டு லீஸா நட்புடன் கை அசைக்க, இவளும் தற்காலிகமாக சோர்வை மறந்து கையை ஆட்டி சிரித்தாள்.
லீஸாவின் பதினாறு வயசுப் பையன் மார்க் தான் இவர்கள் இந்த வீட்டுக்கு வந்த நாளாய் புல் வெட்டும் வேலையை அவ்வப்போது வந்து செய்து தருகிறான். பனி கொட்ட ஆரம்பித்துவிட்ட ஒரு மாசமாய் நடைபாதையை இரண்டு நாட்களுக்கொருதரம் சீர் செய்வதும் அவன்தான். ஒரு தரம் வேலை செய்தால் சம்பளம் ஐந்து டாலர்கள்!
நாலு நாட்கள் முன்னால் பள்ளியில் பேஸ் பால் விளையாடும்போது காலில் அடிபட்டு, இன்னும் இரண்டு வாரங்களுக்கு வரமாட்டான் என்றானதில் இன்று மைதிலிக்கு இந்த வேலை.
ஒரு மணி நேரத்துக்கும் மேல் குனிந்து நிமிர்ந்து ஒரு தினுசாய் நடைபாதையை சுத்தம் பண்ணிவிட்டு உள்ளே வந்தபோது முதுகு வலியோடு தலைவலியும் சேர்ந்திருந்தது.
ஷூக்களை ஷெட்டிலேயே கழற்றிப் போட்டு விட்டு ஓவர்கோட்டை முன் அறை அலமாரியில் மாட்டினாள்.
நேராக சமையல் அறைக்குச் சென்று மைக்ரோவேவ்-அவனில் பால் சுடவைத்து, காபி கலந்து உறிஞ்சினாள்.
அப்பாடா என்றிருந்தது.
மாத்திரைக்காக எழுந்த போது, போன் நீளமாய் ஒலித்தது.
“ஹலோ மைதிலி! எப்படி இருக்கே?”
டொராண்டோவிலிருந்து பத்மா. . .
ஸ்னேகிதியின் குரலைக் கேட்டதும் களைப்பு சட்டென்று குறைந்தது.
ரொம்ப வருஷங்களுக்கு முன்னால் சென்னையில் பத்மாவின் கணவர் ரமணியும், வெங்கட்டும் ஒன்றாக வேலை பார்த்தவர்கள். வெளிநாட்டுக்குச் சென்று பிழைக்க ஆசை உண்டானதும் அவர்கள் கானடா சென்றார்கள். இவர்கள் அமெரிக்கா. . .
“பத்மாவா! இண்டியாலேந்து எப்பத் திரும்பி வந்தாள்?”
ரெண்டு வாரமாச்சு . . . தினமும் பேசணும்னு நினைக்கறேன். ஆனா வந்ததுலேந்து வேலை சரியா இருக்கு. . .”
“பாரதி சங்க வேலையா? இல்ல, கணேஷ் மந்திர் வேலையா?”
பத்மா சிரித்தாள்.
“ரெண்டும்தான். ஏப்ரல்ல தியாகராஜ உத்ஸவம் நடக்கும், தெரியுமோன்னோ? அதுல பாட ஹைட்ராபாட் ப்ரதர்ஸ் வர்றா . . . மார்ச்ல மாண்டலின் ஸ்ரீனிவாஸ் ஏற்பாடாயிருக்கு. கச்சேரிகள் சாக்கிட்டாவது டொரோண்டோ வரக் கூடாதா? பாத்து ஒரு வருஷம் ஆயிருக்காது?”
மைதிலி பதில் கூறாது சிரித்தாள்.
“சிரிச்சு மழுப்பினா, என்ன அர்த்தம்?”
“மழுப்பல பத்மா . . . கச்சேரிகளுக்கு வரணும், கணேஷ் மந்திர்ல இருக்கற பதிமூணு சன்னதிலேயும் நிதானமா நின்னு தரிசனம் பண்ணணும், உங்களோட எல்லாம் நாலு நாளாவது சேர்ந்து இருக்கணும்னு எங்களுக்கும் ஆசை இல்லாம இல்ல. ஆனா, புது வேலை . . . சேர்ந்து நாளாகல . . . லீவு எடுக்கறது கஷ்டம் இல்லையா?”
“சரி, வெங்கட் அப்புறமா வரட்டும் . . . குழந்தைகள கூட்டிண்டு நீ வாயேன். . . இந்தத் தடவை இண்ட்யாலேந்து வந்தப்போ எல்லா ஸ்வாமிகளுக்கும் வெள்ளி கவசம் செஞ்சுண்டு வந்துட்டோம். பார்க்க அமர்க்களமா இருக்கு. . . அதுக்காவானும் ஒரு தடவை வா மைதிலி. . . ”
“கண்டிப்பா வரேன். ஊர்ல எல்லாரும் சௌக்கியமா? மதுரைக்குப் போயிருந்தியா?”
“எல்லாரும் நன்னா இருக்கா. . . அடுத்த வாரம் மறுபடி விவரமா பேசறேன் . . . நாளைக்கு கடைசி தை வெள்ளிக்கிழமை இல்லையா? கோவில்ல அம்பாளுக்கு லக்ஷhர்ச்சனை ஏற்பாடாகி இருக்கு. பூஜை முடிஞ்சதும் அங்கேயே எல்லாருக்கும் சாப்பாடு. போய் காரியங்கள கவனிக்ககணும். . .”
ரிஸிவரை வைத்துவிட்டு வந்த போது `மக்’கிலிருந்த காபி ஜில்லிட்டுப் போயிருந்தது. மறுபடி அதை சுடவைத்து குடிக்கப் பிடிக்காமல் மிச்சம் இருந்ததை தொட்டியில் கொட்டிய நிமிஷத்தில் வாசல் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது.
நிமிர்ந்து சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை ஏறிட்டாள். கௌரி பள்ளியிலிருந்து வீடு திரும்பும் நேரம்.
அவளே தான்.
சமையல் அறைக்குள் வந்த கௌரி புத்தக மூட்டையை சாப்பாட்டு டேபிள் மேல் போட்டுவிட்டு, இரண்டு கால்களையும் அகலப் பரத்திக் கொண்டு பொத்தென்று நாற்காலியில் உட்கார்ந்தாள்.
“ஹாய் மாம் . . .”
“ஷூவை கழட்டாம கிச்சனுக்குள்ள வராதேனு எத்தனை தரம் சொல்றது!”
கௌரி எரிச்சலுடன் `ஷிட்’ என்று முனக, மைதிலி குரலை உயர்த்தினாள்.
“சாமி படங்கள் எல்லாம் வச்சிருக்கறத மறந்து `ஷூ’ காலோட வந்ததும் இல்லாம இது என்ன முணுமுணுப்பு? அப்புறம், அந்த `ஷிட்’ங்கற எழவு வார்த்தையை சொல்றதை விடப்போறியா இல்லியா? கேக்கவே நாராசமா இருக்கு . . .”
கௌரி எரிச்சலை மறந்து சிரித்தாள்.
“என்னை `ஷிட்’டுனு சொல்ல வேண்டாம்னுட்டு இப்ப நீயே `ஷிட்’னு சொல்லிட்டியே – மா”
வேண்டுமென்றே மகள் ஒரு தரத்திற்கு இரண்டு முறையாக `மலம்’ என்கிற வார்த்தையை ஆங்கிலத்தில் பிரயோகிப்பது விளங்க, மைதிலி அவசரமாய் பேச்சை மாற்றினாள்.
“எழுந்து போய் ஷூவை கழட்டிட்டு, யுனிஃபார்மை மாத்திண்டு வா . . . சூடா தோசை வார்த்து தரேன் . . .”
கௌரி எழுந்திருக்கவில்லை.
புருவங்கள் முடிச்சுப் போட வினவினாள்.
“மாம் – எனக்கு ஒரு சந்தேகம். ஷூ போட்டுண்டு இந்த ரூமுக்குள்ள வரக் கூடாதுங்கறே, ஆனா வீட்டுல போட்டுக்கற செருப்போட வரலாம்ங்கறியே! உன்னோட சாமிக்கு செருப்புதான் பிடிக்கும் ; ஷூ பிடிக்காதா?”
மைதிலி அவளை முறைத்தாள்.
“ஷூவை வெளில போட்டுண்டு கண்ட எடத்துக்குப் போறோம். அழுக்கு, அசிங்கம் எல்லாம் இருக்கும். அதனால அத போட்டுண்டு சமையல் கட்டுக்கு வர்றது எனக்குப் பிடிக்கல. . . ஆபரேஷன் தியேட்டருக்குள்ள ஸ்டெரலைஸ்டா எல்லாம் போட்டுண்டு போகணும்னா சரினு சொல்லுவேள். ஆனா, வீட்டு சமையல், பூஜை அறைக்குள்ள சுத்தபத்தமா வாங்கோனு சொன்னா மட்டும் சாமிக்கு செருப்புதான் பிடிக்குமா? `ஷூ’ பிடிக்காதானு குதர்க்கமா கேள்வி! வீட்டுல போட்டுக்கற செருப்பு சுத்தமா இருந்தா கூட, சாமி அலமாரிகிட்ட போறப்போ அதை கழட்டிட்டு போறதுலதான் எனக்கு சம்மதம். ஆனா, என் `இஷ்டத்த இந்தாத்துல யார் கேக்கறா!”
“சாமி அலமாரிகிட்ட போனா ஏன் செருப்பை கழட்டணும்?”
“ஒரு மரியாதைதான். . .”
“வெள்ளைக்காரா எல்லாம் சர்ச்சுல கூட ஷூவோடத்தானே ப்ரார்த்தனை பண்ணறா” – கேட்டுக் கொண்டே, மேஜையில் கிடந்த அன்றைய தினசரி பேப்பரை கிழித்து, ஷூவில படிந்திருந்த அசுத்தத்தை கௌரி அகற்ற, மைதிலி அதட்டினாள்.
“காகிதம்ங்கறது சரஸ்வதி. அது கால்லியோ செருப்பிலயோ மிதிபடறது தப்புனு ஆயிரம் தடவை சொல்லியும் திரும்ப அதையே செய்யறியே! படிக்கற பொண்ணு சரஸ்வதிய அவமதிச்சா, படிப்பு எப்படி வரும்?”
கௌரி கண்கள் அகல அம்மாவை ஏறிட்டாள்.
“சரஸ்வதி பேப்பர்ல மட்டும்தான் இருக்காளா? மத்த சாமான்கள்ல இல்லியா? காட் &டவ;ஸ் ஆம்னிப்ரெஸன்ட். அவர் தூண்லயும் இருப்பார், துரும்புலேயும் இருப்பார்னு சொல்லுவியே, அது தப்பா? தரைய மிதிக்கிறோமே அதுல சாமி இல்லையா? ஓ – மாம் – ஐ டோண்ட் அண்டர்ஸ்டாண்ட் யுவர் லாஜிக்!”
மைதிலி எச்சிலைக் கூட்டி விழுங்கி, தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். மகளோடு தர்க்கம் பண்ண அவள் தயாரும் இல்லை. அதற்கு நேரமும் இல்லை.
“விதண்டாவாதம் பண்ணாம எழுந்து போய் ட்ரஸ் மாத்திண்டு வரயா? எனக்குத் தலைக்கு மேல வேலைக் கிடக்கு . . .”
கௌரி மெதுவாக எழுந்து நின்றாள். கைகளை உயர்த்தி `ஹுயஅயீ;ய்’ என்று சின்னதாக கத்தி சோம்பல் முறித்தாள்.
இரண்டடி எடுத்து வைத்தவள் என்னமோ நினைவுக்கு வந்த தினுசில் நின்று –
“சொல்ல மறந்துட்டேனே! `ஸினிமாவுக்கு என்னோட வர்றியா’-னு மைக் கேட்டான் ; நானும் சரினுட்டேன். நாளைக்கு சாயங்காலம். மை ஃபர்ஸ்ட்டேட், மாம்!” என்ற போது பரபரப்பில் அவள் கண்கள் லேசாக மினுமினுப்பதை மைதிலியால் பார்க்க முடிந்தது.
• • • • •


